மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 10 பேர் காயம் ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையத்தில்

அணைக்கட்டு, மே 23: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட ஊசூர் அடுத்த பூதூர் ஊராட்சி கோவிந்தரெட்டிபாளையம் கிராமத்தில் காளை விடும் திருவிழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவகுமார் தலைமை தாங்கினார். தாலுக்கா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சிவசங்கர் தலைமையில் வருவாய் துறையினர், காவல்துறையினர் உறுதிமொழி ஏற்றதை தொடர்ந்து காலையில் தொடங்கியது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த 83 மாடுகள் பங்கேற்றது. அதில் கால்நடை மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு பின்னர் 74 மாடுகள் வாடி வாசலில் இருந்து வீதியில் அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து ஓடியது. கோடைகால விடுமுறை என்பதால் கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமான பார்வையாளர்கள் திரண்டு விழாவை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

பரிசுகள் இல்லாமல் நடைபெற்ற இந்த விழாவில் ஒரே காளை 3, 4 சுற்றுகள் வரை ஓடியது. தெருவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் உற்சாகத்துடன் விரட்டினர். தொடர்ந்து விழா பகல் 1.30 மணிக்கு முடிக்கப்பட்டது. விழாவில் மாடு முட்டியது, மாட்டின் கயிறு கழுத்து, கால் பகுதியில் சிக்கி காயம் ஏற்பட்டது உட்பட பார்வையாளர்கள் 10 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த 4 பேருக்கு அங்கு முகாமிட்டிருந்த நடமாடும் மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரியூர் போலீசார், அணைக்கட்டு போலீசார் உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசருக்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா முடியும் வரை வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணித்து இருந்தனர்.

The post மாடு விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 10 பேர் காயம் ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையத்தில் appeared first on Dinakaran.

Related Stories: