பேரணாம்பட்டு கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு வேலூர் கலெக்டர் எச்சரிக்கை

வேலூர், மே 21: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா கொட்டாற்றில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கொட்டாறு பகுதியில் வசிக்கும் மக்கள் நீர்வரத்து கால்வாய்களில் செல்ல வேண்டாம் என கலெக்டர் சுப்புலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், பத்தலப்பல்லி ஊராட்சி சின்னாறு பகுதியிலும், எருக்கம்பட்டு ஊராட்சி கோட்டையூர் பெரிய கணவாய் பகுதியிலும் மற்றும் சாத்கர் ஊராட்சி கொட்டாற்றிலும் மழையின் காரணமாக அதிகளவில் தண்ணீர் வெளியேறி வருகிறது. எனவே, கொட்டாற்று கரையில் உள்ள ரங்கம்பேட்டை, குண்டலபல்லி, சாத்கர், அருந்ததியர் காலனி, ஒத்தவாடை தெரு, ஏரிகுத்தி மேடு, ஆயக்கார வீதி, ரஷீதாபாத், பண்டாரவடை, கொத்தபல்லி பகுதிகளில் வசிக்கும் மக்கள் சின்னாறு, கோட்டையூர் பெரிய கணவாய் பகுதிகள் மற்றும் கொட்டாற்றில் இறங்கி செல்லவோ அல்லது சிறார்கள் மற்றும் குழந்தைகளை விளையாடவோ அனுமதிக்கக் கூடாது. வேலூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மழைநீர் வெளியேறும் கால்வாய்கள், ஏரிக்கால்வாய் பகுதி, குளம், குட்டை, ஏரி மற்றும் ஆற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பேரணாம்பட்டு கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு வேலூர் கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: