அணைக்கட்டு, மே 20: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே இந்து சமய அறநிலையத்துறையினருடன் வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு 4 கிராம மக்கள் சேர்ந்து நடத்திய பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா கடந்த 14ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பணம், தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்டவைகளை காணிக்கையாக செலுத்தினர். ஏரித் திருவிழாவின் போது வசூலான உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி வல்லண்டராமம் ஊர் கோயில் மண்டபத்தில் நேற்று நடந்தது. திருவள்ளூர் மாவட்ட இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் சிவஞானம் தலைமையில் வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு 4 கிராம மேட்டுக்குடிகள், ஊராட்சி மன்ற தலைவர் சைனலதா மணி, ஒன்றிய கவுன்சிலர் சிவஞானம் முன்னிலையில் வேலூர் மாவட்ட அறநிலையத்துறை ஆய்வாளர் செண்பகம், கோயில் செயல் அலுவலர் அண்ணாமலை மேற்பார்வையில், கோயில் எழுத்தர் ஆறுமுகம் மற்றும் கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் 40 பேர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய எண்ணும் பணி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. அதில் மொத்தமாக பணம் 10 லட்சத்து 68ஆயிரத்து 110 ரூபாய், 9.500 கிராம் தங்கம், 13.900 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கடந்த ஆண்டு மழையின் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்து ரூ.9.52 லட்சம் உண்டியல் காணிக்கை இருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாக பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தி வழிபட்டுள்ளனர்.
The post ரூ.10.68 லட்சம் உண்டியல் காணிக்கை 9 கிராம் தங்கம், 13 கிராம் வெள்ளியும் இருந்தது பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவில் appeared first on Dinakaran.