பெற்றோருக்கு அலைச்சலின்றி மாணவர் சேர்க்கை அரசுப்பள்ளிகளின் அசத்தல் முயற்சி காஞ்சிபுரத்தை தொடர்ந்து வேலூரில்

வேலூர், மே 22: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அரசு தொடக்கப்பள்ளியை தொடர்ந்து வேலூர் கொணவட்டம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி கியூஆர் கோட் மூலம் மாணவர் சேர்க்கையை தொடங்கி அசத்தி வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கியூஆர் கோட் மூலம் மாணவர் சேர்க்கையை முதன்முதல் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அரசு தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதையறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்தார். இந்த பள்ளியின் முயற்சியை அறிந்த வேலூர் மாநகராட்சி கொணவட்டம் அரசு தொடக்கப்பள்ளி தனது பள்ளி சேர்க்கையையும் கியூஆர் கோட் மூலம் நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்காக தனியாக கியூஆர் கோட் தயார் செய்த அப்பள்ளி தனது வளாக முகப்பிலும், கொணவட்டத்தின் முக்கிய பகுதிகளிலும் கியூஆர் கோட் கொண்ட நோட்டீஸ்களை ஒட்டியுள்ளது. பெற்றோர், போன் மூலம் ஸ்கேன் செய்தால், அவருக்கு மாணவர் சேர்க்கைப் படிவம் தோன்றும். அதில் கேட்கப்படும் மாணவர், பெற்றோர், இருப்பிடம், மற்ற தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதை ஆசிரியர்கள் அச்செடுத்து கோப்பில் வைத்துக்கொள்கிறார்கள். இதன்மூலம், மாணவர் சேர்க்கை உறுதியாகிவிடுகிறது. சேர்க்கை உறுதியானதும் அதற்கான குறுந்தகவல் பெற்றோருக்கு அதேபோன் எண்ணிற்கு சேர்ந்து விடும். இதன் மூலம் பெற்றோர்களின் அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும்போது பெற்றோர் பள்ளிக்குச் சென்று, மாணவரின் படம் ஒட்டுவது, கையெழுத்திடுவது ஆகியவற்றை செய்யலாம். இந்த எளிய நடைமுறையை அனைத்துப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பெற்றோருக்கு அலைச்சலின்றி மாணவர் சேர்க்கை அரசுப்பள்ளிகளின் அசத்தல் முயற்சி காஞ்சிபுரத்தை தொடர்ந்து வேலூரில் appeared first on Dinakaran.

Related Stories: