வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு ரூ.3.10 கோடி வருவாய் சித்ரா பவுர்ணமி சிறப்பு பஸ்களால்

வேலூர், மே 17: வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.3.10 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாதம் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் வருவார்கள். குறிப்பாக கார்த்திகை தீபம், சித்ரா பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இந்நிலையில், திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை சுமார் 35 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இதற்காக மாநில போக்குவரத்து துறை சார்பில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக சென்னை, பெங்களூரு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வேலூர் அரசு போக்குவரத்து கழக மண்டலத்தில் 183 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்மூலம் வேலூர் அரசு போக்குவரத்து மண்டலத்திற்கு ரூ.3.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சித்ரா பவுர்ணமியொட்டி கடந்த 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் வேலூர் மண்டலத்தில் இருந்து 183 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டது. இதன்மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.3.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களை விட இந்தாண்டு கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது’ என்றனர்.

The post வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு ரூ.3.10 கோடி வருவாய் சித்ரா பவுர்ணமி சிறப்பு பஸ்களால் appeared first on Dinakaran.

Related Stories: