வேலூர், மே 16: வேலூர் மாவட்டத்தில் நேற்று வெளியான 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 88.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் கடைசி இடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 15ம் தேதியுடன் நிறைவடைந்தது. இத்தேர்வை வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 243 உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 8,775 மாணவர்களும், 8,977 மாணவிகள் என மொத்தம் 17,752 பேர் எழுதினர். இதையடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. இதில் வேலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 17,752 பேரில் 15,168 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்வு எழுதிய அனைவருக்கும் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்ச்சி விவரம் அனுப்பப்பட்டது. இதுதவிர அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் 7,031 மாணவர்களும், 8,137 மாணவிகளும் என மொத்தம் 15,168 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 80.13, பெண்களின் தேர்ச்சி விகிதம் 90.64 சதவீதமாகும். மொத்த தேர்ச்சி விகிதம் 85.44 சதவீதமாகும். தமிழக அளவில் வேலூர் மாவட்டம் கடைசியாக 38வது இடத்தை பிடித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 49 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. இதில் 33 தனியார் பள்ளிகளும், 16 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாவட்ட அளவில் 4 மாணவர்கள் 496 மதிப்பெண் எடுத்து முதலிடம் எடுத்துள்ளனர். அரசுப்பள்ளியில் 494 மதிப்பெண் ஒருவர் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாணவர்களை பின்னுக்கு தள்ளி மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 38வது இடம் பிடித்த வேலூர் மாவட்டம், இந்தாண்டும் 38வது இடத்தை பிடித்துள்ளது. இது பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post வேலூர் மாவட்டம் 85.44 சதவீதம் தேர்ச்சியுடன் கடைசி இடம் கல்வி ஆர்வலர்கள் அதிர்ச்சி 10ம் வகுப்பு தேர்வில் appeared first on Dinakaran.