வேலூர், மே 16: வேலூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலூரைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. 9ம் வகுப்பு படிக்கிறார். இவரது உறவினர் காட்பாடியைச் சேர்ந்த அப்பு என்கிற சுதாகர்(27). மேஸ்திரி. இருவருக்கும் இடையே கடந்தாண்டு பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் கண்டித்தனர். இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அத்துடன் சுதாகரையும் காணவில்லை. இது குறித்து வேலுார் தெற்கு போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியையும், சுதாகரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் வந்தவாசியில் இருப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குடும்பத்தினர் உதவியுடன் வந்தவாசிக்கு சென்று சுதாகரையும், அந்த சிறுமியையும் போலீசார் நேற்று மீட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில், அந்த சிறுமியை சென்னைக்கு அழைத்துச் சென்ற சுதாகர் அங்கு வைத்து திருமணம் செய்துள்ளார். தற்போது, அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதும், மேலும், சுதாகருக்கு ஏற்கனவே 2 பெண்களுடன் திருமணம் நடந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமி காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை, போக்சோ சட்டத்திற்கு மாற்றி சுதாகரை போலீசார் நேற்று கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
The post சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது வேலூரில் ஏற்கனவே 2 பெண்களுடன் திருமணம் appeared first on Dinakaran.