முருகன் கோயிலின் உபகோயிலான திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோயிலில் ஏப்.20ல் கும்பாபிஷேகம்: கணபதி ஹோமத்துடன் இன்று பூஜைகள் தொடக்கம்

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பெருகி வரும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கடந்த 2022ம் ஆண்டு ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மற்றும் அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி செலவில் பக்தர்களுக்கான பல்வேறு கட்டமைப்பு வசதிகள் கொண்ட பெருந்திட்ட வளாக பணிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டு வேகமாக நடந்து வருகிறது.

இதனுடன் வருகின்ற ஜுலை 7ம்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2023ம் ஆண்டு ஏப். 26ம்தேதி முதல் கும்பாபிஷேக திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் திருக்கோயில் உப கோயிலான தூண்டுகை விநாயகர் கோயிலில் வருகின்ற ஏப்ரல் 20ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி தூண்டுகை விநாயகர் கோயில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் வைத்து இன்று (ஏப். 17) காலை பூஜைகள் தொடங்கியது.

முதலில் மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம் பாத்திர பூஜை, மஹா கணபதி ஹோமம், ப்ரம்மசாரி பூஜை, கஜபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று மாலை தீர்த்த சங்கிரஹணம் நாழிக்கிணறு மற்றும் சமுத்திரத்திலிருந்து தீர்த்தம் எடுத்தல், அதன்பின் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, ரக்ஷோக்ணஹோமம் நடைபெற்று பூர்ணாஹூதி நடைபெறுகிறது.

நாளை (18ம்தேதி) முதல் கால யாக சாலை பூஜைகளும், நாளை மறுதினம் (19ம்தேதி) காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை 3ம் காலை யாக சாலை பூஜைகளும் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவையொட்டி ஏப். 20ம்தேதி காலை 8 மணிக்கு மங்கள இசை, திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை, பிரமசுத்தி மூர்த்திக்கு ரக்ஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், ஷபர்ஸா ஹதி, மஹா பூர்ணா ஹதி, யாத்ரா தானம், வேத பாரயணம், தீபாராதனையாகி காலை 9 மணிக்கு கடம் மூலாலயம் புறப்பாடு, காலை 9.30 மணிக்கு தூண்டுகை விநாயகர் விமான கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகமும், காலை 10.15 மணிக்கு தூண்டுகை விநாயகர் மூலஸ்தானம் கும்பாபிஷேகமும். தொடர்ந்து மஹா அபிஷேகமாகி தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் அன்னதானமும், மாலை 6 மணிக்கு மேல் பிரசன்ன பூஜை புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post முருகன் கோயிலின் உபகோயிலான திருச்செந்தூர் தூண்டுகை விநாயகர் கோயிலில் ஏப்.20ல் கும்பாபிஷேகம்: கணபதி ஹோமத்துடன் இன்று பூஜைகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: