சுவர் விளம்பரத்தில் இருந்த நடிகர் விஜய் முகத்தில் கருப்பு நிற பெயிண்ட் பூசிய பெண்: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி சாலையோரத்தில் ஓட்டப்பட்ட, தவெக கட்சியின் போஸ்டரில் இருந்த நடிகர் விஜய்யின் முகத்தில் கருப்பு நிற பெயிண்ட் பூசிய பெண்ணால் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இதில், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் உள்ள நகராட்சிக்குட்பட்ட காந்திநகர், முதல் தெரு சாலை வளைவில் தமிழக வெற்றி கழகம் சார்பில், நடிகரும் அக்கட்சியின் நிறுவன தலைவருமான விஜய் புகைப்படத்துடன் சுவர் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுடிதார் அணிந்து வந்த இளம் பெண் ஒருவர் கருப்பு நிறத்தில் 50 மில்லி பெயிண்ட் வாங்கி வந்து நடிகர் விஜய்யின் முகத்தில் பூசினார். இதனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து, தகவலறிந்ததும் தமிழக வெற்றி கழகத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் அந்த இளம் பெண் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழகத்தினர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குபதிவு செய்து நடிகர் விஜய் முகத்தில் பெயிண்ட் பூசிய இளம் பெண் குறித்து விசாரணை நடத்தி அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கூடுவாஞ்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சுவர் விளம்பரத்தில் இருந்த நடிகர் விஜய் முகத்தில் கருப்பு நிற பெயிண்ட் பூசிய பெண்: கூடுவாஞ்சேரியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: