திருக்கழுக்குன்றம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்: கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே கிராமத்தில் மேய்க்கால் காடு என்ற வகைப்பாட்டை மாற்றி , கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு வீட்டு மனை பட்ட வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட கொத்திமங்கலம் ஊராட்சியில் அடங்கிய மேலப்பட்டு கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வசிக்கின்ற இந்த இடத்தில் பட்டா இல்லாததால், தொகுப்பு வீடு உள்ளிட்ட அரசு சலுகைகள் எதுவும் கிடைக்கப்பெறாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பட்டா இல்லாததால் மின் இணைப்பும் வழங்கப்படாமல் இருப்பதால் படிக்கின்ற குழந்தைகள் இரவு நேரத்தில் படிக்க முடியாமலும், மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது.

இதனால் பல ஆண்டுகளாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். பட்டா வழங்கக்கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடத்தில் கேட்டால் அந்த இடம் ‘மேய்க்கால் காடு’ என்ற வகைப்பாட்டில் உள்ளதால் பட்டா வழங்க இயலாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, மேய்க்கால் காடு என்ற வகைப்பாட்டை மாற்றி, பட்டா வழங்க ஏதுவான வகைப்பாடாக மாற்றியமைத்து தங்கள் பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று மேலப்பட்டு கிராம மக்கள் கொத்திமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கனகம்மாள் பிச்சைமுத்து தலைமையில் சென்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

The post திருக்கழுக்குன்றம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் 30 ஆண்டுகளாக வசித்து வருபவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்: கலெக்டரிடம் கிராம மக்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: