சென்னை: இந்தி சினிமாவில் காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பரேஷ் ராவல். இவர் பாஜகவை சேர்ந்தவர். இந்தி தவிர, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் நடித்துள்ளார். ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்திருந்தார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட முட்டி காயம் சீக்கிரம் குணமடைவதற்காக தனது சிறுநீரை 15 நாட்களுக்குக் குடித்ததாகக் கூறியிருந்தார். இதுபோல் செய்ய, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் அப்பா வீரு தேவ்கன் தனக்கு பரிந்துரை செய்ததாகவும் பரேஷ் ராவல் தெரிவித்தார். அவரது கருத்து சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் அது குறித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சிறுநீரைக் குடிப்பதால் அது குணமடைய வைக்கும் என்பதற்கான அறிவியல் ரீதியான ஆதாரங்கள் எதுவுமில்லை என டாக்டர்கள் பதிவு செய்து வருகின்றனர். அதனால், பாதிப்புகள்தான் வரும் என தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக பரேஷ் ராவல் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் சுகாதாரத்துறைக்குக்கு கோரியுள்ளனர். மக்களை திசைதிருப்பும் வேலைகளில் பரேஷ் ராவல் ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.