சென்னை: கடந்த 24ம் தேதி, சென்னையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று கூறினார். அவர் இந்த விஷயத்தை பேசி சில நாட்களுக்குப் பின்னர் கன்னட அமைப்பினர் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தின் போஸ்டர்களை கிழித்தார்கள். இப்படி இருக்கும்போது, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கமல்ஹாசனுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். பலரும் கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறினார்கள்.
கமலின் பேச்சுக்கு கர்நாடகத்தை சேர்ந்த நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம்.பியுமான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அவரது எக்ஸ் பக்கத்தில் மொழிக் குடும்பம் வரலாறு தொடர்பாக ஒரு வரைபடத்தை பகிர்ந்துள்ளார். மேலும்., ‘‘கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்தும் திராவிட மொழிகள் என்று குறிப்பிட்டு தான் அப்படி பேசியுள்ளார் என்று நினைக்கிறேன்.
நமது மொழிகள் ஒரே வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது. அவர் பேசியதை மன்னிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ஒருவர் கமல்ஹாசன் சொன்ன, அன்பு மன்னிப்பு கேட்காது என்று பதிவிட்டார். இதற்கு பதில் அளித்த திவ்யா ஸ்பந்தனா, ‘‘இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அன்பில் ஈ.கோ என்ற ஒன்று இருக்கவே இருக்காது ஒருவர் எளிதாக மன்னிப்பு கேட்க முடியும்’’ என்று பதிவிட்டுள்ளார்.