திருச்சி: திருச்சியில் நேற்று முன்தினம் நடந்த முத்தரையர் சதயவிழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வந்திருந்தனர். இதேபோல், புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் பங்கேற்றுவிட்டு, சென்னை செல்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்திருந்தார். அப்போது, நேருக்கு நேர் சந்தித்ததால் மரியாதை நிமித்தமாக நயினார் மற்றும் எல்.முருகனுக்கு சால்வை அணிவித்து நலம் விசாரித்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் திருமாவளவன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் ஆகியோருடன் சந்திப்பு குறித்த வீடியோவை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், ‘திருச்சி விமான நிலையத்தில் எதிர்பாராதவிதமாக பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோரை சந்தித்தேன், பாஜவின் மாநில தலைவராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்’ என பதிவிட்டுள்ளார்.
The post திருச்சி விமான நிலையத்தில் எல்.முருகன், நயினாருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.