சேலம், மே.25: சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 130 கிலோ ஹான்சை போலீசார் பறிமுதல் செய்ததுடன் ஒருவரை கைது செய்தனர். சேலம் வீராணம் இன்ஸ்பெக்டர் சங்கீதா, எஸ்.ஐ. மோகன்முத்துராமன் மற்றும் போலீசார், தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலீப், விமல் உள்ளிட்ட பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஒவ்வொரு சிறு சிறு பெட்டிக்கடைகளுக்கு டூவீலரில் வரும் ஒருவர், ஹான்ஸ் உள்ளிட்டவைகளை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி குறிப்பிட்ட நபர் நேற்று, வீராணம் பகுதிக்கு வந்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் எஸ்.எஸ்.ஐ. நந்தகுமார், போலீசார் மணிவண்ணன், ராஜதுரை ஆகியோர் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அவர் கன்னங்குறிச்சி சின்னக்கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியில் உள்ள சிறிய குடோனுக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்றவர்களும் உள்ளே புகுந்தனர். அங்கு 11 சாக்குமூட்டைகளில் ஹான்ஸ் உள்ளிட்டவை இருந்தது. அவை மொத்தம் 130 கிலோவாகும். இதனை பறிமுதல் செய்த போலீசார், அதனை பதுக்கி வைத்திருந்த சபீர்(49) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post குடோனில் பதுக்கிய 130 கிலோ ஹான்ஸ் பறிமுதல் appeared first on Dinakaran.