சேலம் ஜூன் 6: சேலம் எருமாபாளையம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் லட்சுமிபுரம் குடியிருப்பு செயலாளராக இருந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி (36), லோகநாதன்(35). அண்ணன் தம்பிகளான இவர்களுக்கும் ஜெய்சங்கருக்கும் இடையே பொதுபாதை தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது.இதுதொடர்பாக ஜெய்சங்கர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி, லோகநாதன் ஆகிய இருவரும் பொக்லைன் மூலம் பொது வழிப்பாதை அருகேயுள்ள ஜெய்சங்கரின் சுற்றுச்சுவரை இடித்தனர். அதனை தடுத்து நிறுத்திய ஜெய்சங்கரையும் தாக்கினர். இதுபற்றி ஜெய்சங்கர், கிச்சிபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் கிருஷ்ணமூர்த்தி, லோகநாதனை கைது செய்தனர்.
The post பொது வழிப்பாதை தகராறு சுவற்றை இடித்து வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது appeared first on Dinakaran.