கறம்பக்குடி, மே 23: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், பல்லவராயன் பத்தை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அப்பகுதி மக்களின் நலன் கருதி பல ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது அதன் காரணமாக குடிநீர் தேவையை அப்பகுதி பொதுமக்கள் பூர்த்தி செய்து வந்தனர் ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு செயல்பட்டு வந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்ததன் காரணமாக பல்லவராயன் பத்தை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக இடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது. அதன் பிறகு, அதே இடத்தில் ஆழ்குழாய் கிணறு இருந்தும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படாததால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தினம்தோறும் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிநீருக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குறிப்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் ஒன்றிய நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அப்பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் தலையிட்டு 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல் நீர்த்தேக்க தொட்டி அமைத்துத் தந்து குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒன்றிய நிர்வாகத்திற்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post பல்லவராயன் பத்தையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.