மற்ற நிர்வாகிகள் 310 பேரில் 200 பேர் வரை பங்கேற்றதால் ராமதாஸ் உற்சாகம் அடைந்தார். இருப்பினும் 3 நாள் நடந்த கூட்டங்களையும் செயல் தலைவரான அன்புமணி புறக்கணித்தார். கட்சியை தன் கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்த நிலையில், வன்னியர் சங்கம் ராமதாசுக்கு ஆதரவாக நின்றதால் பாமகவை முழுமையாக தன்வசமாக்கும் அன்புமணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனிடையே நேற்று ராமதாஸ் எந்த நிர்வாகிகள் கூட்டத்தையும் கூட்டாமல் தோட்டத்தில் ஓய்வெடுத்தார். இந்நிலையில் இன்று (21ம்தேதி) சமூக நீதிப் பேரவை வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளை ராமதாஸ் சந்திக்க உள்ளார்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. பாமக செயல் தலைவர் அன்புமணி, சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் அன்புமணி, சமூக நீதி பேரவையின் தலைவரான வழக்கறிஞர் பாலு ஆகியோர் கலந்து கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு பாமக வட்டாரத்தில் எழுந்துள்ளது. உட்கட்சி மோதல் உருவானபின் வழக்கறிஞர் பிரிவு தலைவரான பாலு தைலாபுரம் தோட்டத்துக்கு வருவதை தவிர்த்து வந்துள்ளார். அதேசமயம் கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளதாக மாநில செயலாளர் பாலாஜி நேற்று தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வந்த பாமக பொருளாளர் திலகபாமா அளித்த பேட்டியில், ‘‘பாமகவில் ராமதாஸ் சொல்வதையும், சிந்திப்பதையும் தலைவர் அன்புமணி வழியில் அனைவரும் செயல்படுத்தி வருகிறோம். எனக்கு ராமதாசும் முக்கியம், அன்புமணியும் முக்கியம்’’ என்று தெரிவித்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு விடுத்தும் நீங்கள் ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அன்புமணிக்கு ஆதரவு குரல் கொடுத்ததால் திலகபாமாவை ராமதாஸ் சந்திக்காமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
* 200 பேருக்கு அழைப்பு
சமூக நீதி பேரவை வழக்கறிஞர் பிரிவின் மாநில தலைவராக வழக்கறிஞர் பாலு உள்ளார். மாநில செயலாளராக பாலாஜி உள்ளார். மாநில பொறுப்பில் 6 பேரும், மாவட்ட செயலாளர், தலைவர் பொறுப்புகளில் 200 பேரும் உள்ளனர். இதுதவிர இப்பிரிவுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 3,000 நிர்வாகிகள் உள்ளனர். இதில் முக்கிய நிர்வாகிகள் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று ஓய்வில் இருப்பதாகவும், நிர்வாகிகளை சந்திக்கவில்லை என்றும் கூறப்பட்ட நிலையில், அவர் தைலாபுரம் இல்லத்தில் வீட்டின் பின்புறம் உள்ள நீச்சல் குளத்தில் எதிர்நீச்சல் அடித்துக் கொண்டு உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. 86 வயதில் 8 வகையான உடற்பயிற்சியோடு எதிர்நீச்சல் அடிக்கும் அய்யா என அவரை குறிப்பிட்டு ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வீடியோவை தொண்டர்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்ததோடு மற்றவர்களுக்கும் அதை பகிர்ந்து வருகின்றனர்.
The post தைலாபுரத்தில் இன்று நடைபெறும் சமூக நீதி பேரவை கூட்டம்: அன்புமணி பங்கேற்பாரா? பாமகவில் நீடிக்கும் சலசலப்பு appeared first on Dinakaran.