சிவகங்கை, மே 20: தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி வளர்ச்சி பெற்ற மாநிலம் அனைத்து வளமும் பெற்ற மாநிலமாக கருதப்படும் என்ற அடிப்படையில், எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அத்திட்டங்கள் மட்டுமின்றி, புதிதாகவும், தொலைநோக்கு பார்வையுடனும் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்லாது, அவர்களது தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில் நாள் முதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் 28 லட்சம் கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழகத்தில் ஆண்டுக்கு 10லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் சிறந்து விளங்கிட வேண்டும் என்பதேயாகும். அவர்கள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படி படிக்கலாம் என்று வழிகாட்டிடவும் வழிவகை செய்கிறது. உயர்கல்வி நிறுவனங்கள், உயர்கல்வி படிப்புகள் மற்றும் வங்கிக் கடன்கள் சார்பான அரங்குகள் அமைக்கப்படுகிறது. உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய விபரங்களுடன், துறைசார் வல்லுநர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், கலைப்படிப்புகள், அறிவியல் படிப்புகள் மற்றும் ஊடகவியல் சார்ந்த படிப்புகள் என பல்வேறு படிப்புகளில் உள்ள உட்பிரிவுகள், அவற்றிற்கான வேலை வாய்ப்புகள் குறித்து இத்திட்ட நிகழ்ச்சிகளில் வழிகாட்டப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் இதுவரை 6,936 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
The post நான் முதல்வன் திட்டத்தில் 6,936 மாணவ, மாணவியர் பயன் appeared first on Dinakaran.