அணைக்கட்டு, ஜூன் 10: அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் கட்டுமான பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகள், ஜாக்கிகளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் தற்போது விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக இரும்பு கம்பிகள் உட்பட கட்டுமான பொருட்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டு ஏ.டி.காலனியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் இதனை கண்காணித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் அங்கு கட்டுமான பணிக்காக வைத்திருந்த கம்பிகள், ஜாக்கிகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், காவலாளி மகேஸ்வரன் அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார். அதில், அணைக்கட்டு அருந்ததியர் காலனியை சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார், அவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் கட்டுமான பணிக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகள், ஜாக்கிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விக்னேஷ்(21) மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், அவர் திருடிச்சென்ற இரும்பு கம்பிகள், ஜாக்கிகளை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இரும்பு கம்பிகள், ஜாக்கிகள் திருடியவர் கைது அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் appeared first on Dinakaran.