புதுச்சேரி, ஏப். 23: புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் 6 பேரிடம் ரூ.33.49 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகனை சென்ைனயை சேர்ந்த ஒருவர் தொடர்புகொண்டு ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனைநம்பி பழனிசாமியின் மகன் ரூ.15.40 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அப்பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை, அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.
இதேபோல் வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த கவுதமன் ரூ.50 ஆயிரம் இழந்துள்ளார். மேலும் ரெட்டியார்பாளையம் சேர்ந்த மானேகிரி என்பவரை மர்ம நபர் ஒருவர் டெலிகிராம் மூலம் தொடர்புகொண்டு வீட்டிலிருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறியுள்ளார். இதனைநம்பி மானேகிரி ரூ.16.51 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதில் சம்பாதித்து பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரியவந்தது.
இதேபோல் கோர்டுகாடு பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவர் ரூ.28 ஆயிரமும், ஒயிட் டவுன் சேர்ந்த கவுசல்யா ரூ.66 ஆயிரமும் இழந்துள்ளார். மேரி உழவர்கரை சேர்ந்த மஞ்சிலி ரூ.14 ஆயிரம் இழந்துள்ளார். இவர்கள் மொத்தமாக ரூ.33.49 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தொடர்ந்து ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post புதுவையில் தொடர்ந்து ஏமாறும் மக்கள் 6 பேரிடம் ரூ.33.49 லட்சம் ஆன்லைன் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.