பிச்சைக்காரன், சாமியார் பாவனை காட்டி கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

புதுச்சேரி, ஏப். 29: புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் கடந்த 15ம் தேதி உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்து ரூ.10 ஆயிரத்து 300 பணம் திருடு போனது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதிகாலை 4 மணியளவில் கோயிலுக்குள் மர்ம நபர் புகுந்து உண்டியலை உடைத்துள்ளார். பின்னர் அமர்ந்து கொண்டு உண்டியலில் இருந்த பணத்தை எடுத்து துணியில் மூட்டை கட்டிக்கொண்டு மீண்டும் உண்டியலை மூடி வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் திருடனை தேடி வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு உழந்தை கீரப்பாளையம் பகுதியில் உள்ள கோயிலில் இரவு 9.30 மணியளவில் திருட வந்துள்ளார். இவரை பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தஞ்சாவூர், பாபநாசம், குப்பமேடு, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த வினோத்குமார் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரித்ததில் முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோயில் உண்டியலை உடைத்ததை ஒப்புக்கொண்டார். பிறகு அவரிடம் இருந்து ரூ.1600 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கொண்டு விசாரணையில், அவர் கொத்தனார் வேலை செய்து வந்ததும், அவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் கையில் பணம் இல்லாமல் சாலையோரம் உள்ள கோயில் உண்டியலை உடைத்து திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், இவர் ஒரு கோயில் உண்டியலை உடைப்பதற்கு முன்தினம் அந்த கோயிலுக்கு வந்து நோட்டமிட்டு காவி துண்டு வைத்துக்கொண்டு பிச்சைக்காரன், சாமியார் போன்று தன்னை பாவனைகாட்டிக்கொண்டு கோயிலில் படுத்துக்கொள்வார். பிறகு அதிகாலையில் கோயில் உண்டியலை இரும்பு ராடால் உடைத்து பணத்தை திருடி மூட்டைக்கட்டிக்கொண்டு சென்றுவிடுவார். இதனை அவர் நீண்ட நாட்களாக செய்து வருவது தெரியவந்தது. மேலும் இவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதா? என்பது குறித்து போலீசார் கைரேகைகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து திருட்டுக்கு பயன்படுத்திய இரும்பு ராடை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

The post பிச்சைக்காரன், சாமியார் பாவனை காட்டி கோயில் உண்டியலை உடைத்து திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: