செம்மொழி நாள் விழா பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டி

சென்னை: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று செம்மொழி நாள் விழாவாக 2025ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான சூன் திங்கள் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாகக் கொண்டாடப்படும்”.

செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி 03.06.2025ஆம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். மாவட்ட மற்றும் மாநில அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி தொடர்பான விவரம் பின்வருமாறு: –

11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்டப்போட்டி:

அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 09.05.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். இப்போட்டிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்களை தமிழ் வளர்ச்சித்துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அவர்கள் பயிலும் பள்ளியின் மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் / உதவி இயக்குநர்கள் அலுவலகங்களில் நேரடியாக பெற்று தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் 08.05.2025ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் அலுவலகங்களில் நேரில் அளிக்க வேண்டும்.
இப்போட்டிகளில் அரசுப்பள்ளி, தனியார் பள்ளி, பதின்ம பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம்.

சென்னை மாவட்டத்தில் போட்டி நடைபெறும் நாள். 09.05.2025, நேரம் மு.ப.9.00 மணி, இடம்- சி.கல்யாணம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.

போட்டிக்கான தலைப்புகள் “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த் தொண்டின் பெருமை” சார்ந்த தலைப்புகள்

கட்டுரை போட்டி:

* முத்தமிழறிஞர் கலைஞர் எழுத்தில் சமூகநீதி

பேச்சுபோட்டி

* கவிஞர் முத்தமிழறிஞர் கலைஞர்
* மொழியின் நாயகர் முத்தமிழறிஞர்

போட்டிகளில் பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும் தேநீர், மாச்சில், மதிய உணவு மற்றும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பெறும். மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர்.

கல்லூரி மாணவர்களுக்கான மாவட்டப் போட்டி:

அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 10.05.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை தமிழ் வளர்ச்சித்துறையின் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அவர்கள் பயிலும் கல்லூரியின் மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் / உதவி இயக்குநர்கள் அலுவலகங்களில் நேரடியாக பெற்று துறைத்தலைவரின் பரிந்துரையுடன் 08.05.2025ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் அலுவலகங்களில் நேரில் அளிக்க வேண்டும். இப்போட்டிகளில் கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல், பல்தொழில்நட்பம், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம். சென்னை மாவட்டத்தில் போட்டி நடைபெறும் நாள். 10.05.2025, நேரம் மு.ப.9.00 மணி, இடம்- காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சென்னை-2

போட்டிக்கான தலைப்புகள் “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை” சார்ந்த தலைப்புகள்

 

மாவட்டப் போட்டி பரிசுத் தொகை விவரம் (பள்ளி / கல்லூரி)

கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு 10,000/- இரண்டாம் பரிசு 7,000/- மூன்றாம் பரிசு 5,000/- வழங்கப்படும். மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர்.

* சென்னை மாவட்ட அளவில் போட்டிகள் நடைபெறும் இடம்

சி.கல்யாணம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2. காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, சென்னை-2.

மாநிலப் போட்டி:

தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரை / பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று பரிசு பெறும் மாணவர்களுக்கு 03.06.2025 அன்று நடைபெறும் செம்மொழிநாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.

மாநிலப் போட்டி பரிசுத் தொகை விவரம் பள்ளி / கல்லூரி

கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு 15,000/-
இரண்டாம் பரிசு 10,000/- மூன்றாம் பரிசு 7,000/ வழங்கப்படும். 03.06.2025 அன்று நடைபெறும் செம்மொழிநாள் விழா தொடர்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் மாவட்ட / மாநில அளவில் பரிசுத் தொகை ரூ.34,72,000/- (ரூபாய் முப்பத்து நான்கு இலட்சத்து எழுபத்திரண்டாயிரம் மட்டும்) தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

The post செம்மொழி நாள் விழா பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டி appeared first on Dinakaran.

Related Stories: