வெயில் கொடுமை: மும்பை வாலிபர் உயிரிழப்பு?

நெல்லை: நெல்லையில் மும்பை வாலிபர் மயங்கி உயிரிழந்தார். இவர் வெயில் கொடுமையால் பலியானதாக கூறப்படுகிறது. மும்பை தாராவியை சேர்ந்தவர் சண்முகம். இவர், அங்குள்ள ரயில்வே கேண்டீனில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் மணி(25), சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 14ம் தேதி சண்முகம், கார்த்திக் மணி மற்றும் குடும்பத்தினருடன் பாளை. ரெட்டியார்பட்டி ஜெ.ஜெ. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். கடந்த 16ம் தேதி நாங்குநேரி மறுகால்குறிச்சியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு சென்றனர். அப்போது கார்த்திக் மணியை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

பின்னர் சண்முகம் குடும்பத்தினர் வீடு திரும்பியபோது கார்த்திக் மணியை காணவில்லை. அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிந்து தேடியபோது, பாளை. இட்டேரி காட்டுப்பகுதியில் உடலில் கொப்பளங்களுடன் வாலிபர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. அது கார்த்திக் மணிதான் என அடையாளம் காட்டினர். வெயில் கொடுமையால் சுருண்டு விழுந்து இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

The post வெயில் கொடுமை: மும்பை வாலிபர் உயிரிழப்பு? appeared first on Dinakaran.

Related Stories: