ஊட்டி, ஏப். 12: நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். இதனை முன்னிட்டு வரும் 16ம் தேதி காலை மணிக்கு உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தில் கள ஆய்வு ஊட்டி வட்டத்தில் நடைபெற உள்ளது. இதில், மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து மாவட்ட உயர்நிலை அலுவலர்கள் வருவாய் கிராமங்கள் வாரியாக கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள்.
அரசு அலுவலகங்களை ஆய்வு செய்கிறார்கள், ஆய்வு மேற்கொள்ளும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்து நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கான மனுக்களை கள ஆய்வில் ஈடுபடும் மாவட்ட உயர்நிலை அலுவலர்களிடம் நேரில் அளித்தோ அல்லது அன்று பிற்பகல் ஊட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக அளித்தோ பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளார்.
The post 16ம் தேதி உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கள ஆய்வு appeared first on Dinakaran.