இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

ஊட்டி, ஏப்.25: நீலகிரி மாவட்டத்தை பொருத்த வரை 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு மொத்தமுள்ள 294 பதவிகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் குன்னூர் நகராட்சி தலைவராக இருந்த 6வது வார்டு கவுன்சிலர் ஷீலா கேத்தரின் அண்மையில் காலமானார். இதேபோல் நெல்லியாளம் நகராட்சி 10வது வார்டு கவுன்சிலர், உலிக்கல் பேரூராட்சி 18வது வார்டு கவுன்சிலர், கீழ்குந்தா பேரூராட்சி 6வது கவுன்சிலர் ஆகியோர் பதவிகள் காலியாகின. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல்களை மே மாதம் மாநில தேர்தல் ஆணையம் நடத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட அளவில் இத்தேர்தலை நடத்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

நீலகிரியில் காலியாக உள்ள 4 உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுபாட்டு இயந்திரங்கள் கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு ெசய்யப்பட்டு கடந்த 18ம் தேதி ஊட்டி கொண்டு வரப்பட்டு ஊட்டி கேரளா கிளப் கட்டிடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்நிலையில், இவ்வாக்குபதிவு இயந்திரங்களில் ஏதேனும் பழுதுகள் உள்ளனவா, முறையாக இயங்குகின்றனவா என்பது குறித்து பெங்களூரில் இருந்த வந்த பெல் நிறுவன பொறியாளர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், நீலகிரியில் காலியாக உள்ள 4 உறுப்பினர் பதவிகளை நிரப்ப மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து 65 வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த இயந்திரங்களில் பெல் நிறுவன பொறியாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில் பழுதான இயந்திரங்கள் ஏதேனும் இருந்தால் அதற்கு பதிலாக வேறு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படும்’ என்றனர்.

The post இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: