சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்திபேரணி நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி மனு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் மார்ச் 16ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில், கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பும், சமூக நீதியும், பஞ்சமர் நில மீட்பும் என்ற பெயரில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி திருப்போரூர் காவல் நிலையத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், கந்தசாமி கோயில் மாசி பிரமோற்சவ விழா, முகூர்த்த நாள் என்பதால் பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சசிகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சங்கர், போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மற்ற அரசியல் கட்சிகளின் கூட்டம் அந்த இடத்தில் நடைபெறுவதாக கூறினார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.கோபிநாத், கந்தசாமி கோயில் மாசி பிரமோற்சவ விழா காரணமாகவே அனுமதி மறுக்கப்பட்டது. பேரணி நடத்த எந்த கட்சிக்கும் அனுமதியில்லை என்று தெரவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் நாளை (இன்று) உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி கூறினார்.

The post சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்திபேரணி நடத்த அனுமதி கோரி நாம் தமிழர் கட்சி மனு appeared first on Dinakaran.

Related Stories: