கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி

சென்னை: கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள நடைபாதைகள், பேருந்து நிறுத்தங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை சென்னை மாநகராட்சி அகற்றி வருகிறது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள், நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடும் வகையில் அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இவைகளில் உள்ள குப்பைகள், கட்டிட கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டிட மற்றும் இடிபாடு கழிவுகள் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மாணவர்களின் நலனையும், பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு, இப்பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிறுத்தப் பகுதிகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகளையும் தீவிரமாக அகற்றும் பணிகள் நேற்று மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு, கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: