அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி

அரியலூர், அக். 2: அரியலூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் அரியலூர் நகராட்சி இணைந்து பொதுமக்களுக்கு தூய்மையே சேவை என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளுடன் கூடிய நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நேற்று காலை 10 மணியளவில் கல்லூரியிலிருந்து புறப்பட்டு அரியலூர் பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது. பேரணியை கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமையேற்று நடத்தினார்.

தொடர்ந்து, அரியலூர் கோட்டாட்சியர் ராமக்கிருஷ்ணன் தலைமையில் செட்டி ஏரி பூங்காவில் மாணவர்கள் தூய்மை பாரத உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். பின் மாணவர்கள் அரியலூர் செட்டேரி பூங்காவை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. மேற்படி பணியில் 100 மாணவ, மாணவிகள் நகராட்சி பணியாளர்களுடன் சேர்ந்து அங்கிருந்த நெகிழி பொருட்கள், குப்பைகள் மற்றும் புல் பூண்டுகளை அகற்றி சுத்தம் செய்தனர். மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் கருணாகரன் (அலகு-1) மற்றும் மேரி வயலட் கிருஸ்டி (அலகு-3) ஆகியோர் செய்தனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் தர்மராஜ், நகராட்சி மேற்பார்வையாளர்கள் சிவஞானம், கிருஷ்ணம்மாள், தாமஸ் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் சந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: