செம்பனார்கோயில், மே 23: கிள்ளியூர் ஊராட்சி ராமகோட்டகம் கிராமத்தில் உள்ள குளத்தில் நிறைந்துள்ள ஆகாய தாமரையை அகற்றி குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்பனார்கோயில் அருகே கிள்ளியூர் ஊராட்சி ராமகோட்டகம் கிராமத்தில் குளம் உள்ளது. முன்பு இந்த குளத்தை அப்பகுதி மக்கள்குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். மார்கழி மாதத்தில் அப்பகுதி மக்கள் அதிகாலையில் எழுந்து இந்த குளத்தில் நீராடிவிட்டு சாமி வழிபாடு செய்வது வழக்கமாக இருந்து வந்தது.
மேலும் அப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகள் குளத்தில் உள்ள தண்ணீரை குடித்து தாகம் தீர்த்து வந்தன.
இவ்வாறு பயன்பாட்டில் இருந்த இந்த குளத்தில் ஆகாயத்தாமரைகள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாயத்தாமரைகள் மண்டி கிடப்பதால் மழை காலங்களில் மழைநீர் குளத்திற்கு வராமல் வீணாகிறது. இதனால் குடியிருப்புகள் மற்றும் வயல்களில் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும் குளத்தின் படித்துறையும் உடைந்து சேதமடைந்துள்ளது. புதர் மண்டி கிடப்பதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே ராமகோட்டகம் கிராமத்தில் உள்ள குளத்தில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடி கொடிகளை அகற்றி தூர்வாரி பொதுமக்கள் பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post செம்பனார்கோயில் அருகே குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள் appeared first on Dinakaran.