மண் வளத்துக்கும், நீர் வளத்துக்கும் ஆபத்து… அரியமான் கடற்கரைப் பகுதியில் குவியும் பாலித்தீன் குப்பைகள்: அசுத்தமாகும் அழகிய சுற்றுலாத் தலம்

ராமேஸ்வரம்: இயற்கை எழில் சூழ்ந்த அரியமான் கடற்கரை பகுதியில் குவியும் பாலித்தீன் குப்பைகளால் கடற்கரை பகுதி அசுத்தமாகி வருகிறது. இதனால், மண் வளத்துக்கும், நிலத்தடி நீர்வளமும் பாதிக்கப்படுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து 21 கி.மீ தூரத்தில் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் அரியமான் கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு வெண்மையான, அழகிய மணல் பரப்பு உள்ளது. இதையொட்டி சவுக்கு மரங்கள் நிறைந்த தோப்பு பகுதி உள்ளது. இயற்கை சூழல் நிறைந்த இந்த கடற்கரையின் அழகை கண்டு களிக்க தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கடற்கரையை சாத்தக்கோன்வலசை ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஆனால், கடற்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான சுத்தமான கழிப்பறை, வாகனங்கள் நிறுத்துவதற்கு முறையான பார்க்கிங், குடிநீர் வசதிகள் என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை என சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் கூறுகையில், ‘கடற்கரை பகுதியில் தினசரி குப்பைகளை அகற்றாததால், சவுக்கு மரதோப்பு பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால், சுற்றுலாப் பயணிகள் இங்கு அமர்ந்து ஓய்வு எடுப்பதை தவிர்க்கின்றனர். குடிமகன்கள் ஆங்காங்கே வீசும் காலிப் பாட்டில்கள் மணலில் புதைந்து கிடக்கின்றன. இவைகள் காலணிகள் இல்லாமல் செல்வோரின் கால்களை பதம் பார்க்கின்றன. இயற்கை அழகு நிறைந்த கடற்கரை சவுக்கு தோப்பு பகுதி குப்பைக் காடாக மாறி வருகிறது. நாளடைவில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

வாகனக் கட்டண வசூல்
சாத்தக்கோன்வலசை வலசை ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரியமான் கடற்கரை சாலையில் ரயில்வே கேட் முன்பாக கட்டணச்சாவடி அமைத்து டூவீலருக்கு ரூ.5, நான்கு சக்கரவாகனங்களுக்கு ரூ.30, கனரக வாகனங்களுக்கு ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், முறையான அடிப்படை வசதிகளும் இல்லாத கடற்கரைக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என சுற்றுலா பயணிகளின் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

இயற்கை வளம் பாதிப்பு
இந்த கடற்கரை பகுதியோரங்களில் சவுக்கு மர தோப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த தோப்புகளில் பிளாஸ்டிக் பை, பிஸ்கட் கவர், வாட்டர் பாட்டில், சரக்கு கப் மற்றும் மது பாட்டில்கள் என பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் தேங்குகின்றன. இவைகள் மண்ணில் புதைந்து மண் வளத்தை பாதிக்கின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும் சவுக்கு தோப்புகளில் அதிகமாக வளர்ந்துள்ள கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி நீர்வளத்தை குறைக்கின்றன. மணலுக்குள் தேங்கி கிடக்கும் நெகிழி கழிவுகளில் இருந்து வரும் ரசாயனம், நிலத்தில் தேங்கி மண்வளத்தை மாசு அடையச் செய்கிறது. இங்கு உணவுகளுடன் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் சாப்பிட்டு குடல் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

The post மண் வளத்துக்கும், நீர் வளத்துக்கும் ஆபத்து… அரியமான் கடற்கரைப் பகுதியில் குவியும் பாலித்தீன் குப்பைகள்: அசுத்தமாகும் அழகிய சுற்றுலாத் தலம் appeared first on Dinakaran.

Related Stories: