பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சு யூடியூபர் சங்கர் தேனியில் கைது: சிறையில் அடைப்பு

கோவை: போலீஸ் அதிகாரிகள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் யூடியூபர் சங்கரை கோவை போலீசார் தேனியில் கைது செய்தனர். யூடியூப்பர் சங்கர் பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், பெண் ஏட்டுக்கள், மற்றும் பெண் எஸ்ஐக்கள் குறித்து ஆபாசமாக பேட்டி அளித்தார். அந்தப் பதிவை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டது பல்வேறு தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் தரப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் சங்கரை விசாரணைக்காக தேடியபோது, தேனி மாவட்டம், பூதிப்புரம் செல்லும் வழியில் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினரும், ரயில்வே கான்ட்ராக்கடருமான ஒருவது தங்கும் விடுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் 6 கார்களில் தேனி சென்ற 20க்கும் மேற்பட்ட போலீசார், விடுதியின் வரவேற்பு அறைக்கு சென்று, விடுதியில் யார்?, யார்? தங்கியுள்ளனர் என விசாரணை நடத்தினர்.

பின்னர் சங்கர் அறைக்கு சென்ற போலீசார், கதவை தட்டினர். கதவை திறந்த சங்கரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவைக்கு வேனில் அழைத்து சென்றனர். நேற்று காலை கோவைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக வேன் வந்து கொண்டிருந்தபோது கோவை செல்லும் சாலையில், தெக்கலூர் என்ற இடம் அருகே வந்தபோது எதிரே கார் மெக்கானிக் லோகநாதன் என்பவர் ஓட்டி வந்த கார், போலீஸ் வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் லோகநாதன் படுகாயம் அடைந்தார். இவ்விபத்தில் சங்கர் மற்றும் போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சங்கரை தாராபுரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தி மாற்று வாகனத்தில் கோவை அழைத்து வந்தனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்து உடல் பரிசோதனை செய்யப்பட்டு, கோவை ஜேஎம் 1 நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தினர். வழக்கை நீதிபதி கோபால கிருஷ்ணன் வரும் 17ம் தேதிவரை சங்கரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கோவை சிறையில் சங்கர் அடைக்கப் பட்டார்.

* டிரைவர், உதவியாளர் கஞ்சாவுடன் கைது: சங்கர் மீதும் வழக்குப்பதிவு
தேனி விடுதியில் தங்கியிருந்த சங்கருடன் அவரது கார் டிரைவரான சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த பிரபு (27), உதவியாளரான பரமக்குடியை சேர்ந்த ராஜரத்தினம் (42) ஆகியோரும் விடுதியில் தங்கியிருந்தனர். சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவருடன் இருந்த டிரைவர் மற்றும் உதவியாளர் இருந்த அறையில் பழனிசெட்டிபட்டி போலீசார் சோதனையிட்டனர்.  அப்போது, அறையில் கஞ்சா நிரப்பிய சிகரெட்கள், உலோகத்தினாலான கூம்பு வடிவ சிகரெட் நிரப்பும் குழாய்கள், 400 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் தேனி மாவட்ட கூடுதல் எஸ்பி விவேகானந்தன், தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், அறையில் கஞ்சா புகைத்தது உறுதியானது.இதையடுத்து சங்கர், ராம்பிரபு, ராஜரத்தினம் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ராம்பிரபு, ராஜரத்தினத்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதில், சங்கரும் கஞ்சா புகைத்தது உறுதி செய்யப்பட்டால் அவர் மீதும் கைது நடவடிக்கை பாயும் என்று போலீசார் தெரிவித்தனர்.

* செருப்பால் அடிக்க முயன்ற பெண்கள்
கைதான சங்கரை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அப்போது கோர்ட் வளாக நுழைவு வாயில் முன்பு கையில் செருப்புடன் காத்திருந்த பெண்கள் போலீஸ் வேனை சூழ்ந்து கொண்டு வேனுக்குள் இருந்த சவுக்கு சங்கரை செருப்பால் தாக்க முயன்றனர்.

* 4 பிரிவுகளில் வழக்கு
கோவையை சேர்ந்த பெண் எஸ்ஐ ஒருவர் அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது 294 (பி) பிரிவின்படி பொதுவெளியில் பெண்ணை அவதூறாக கேவலப்படுத்தும் வகையில் பேசுதல், 509 மற்றும் 353 பிரிவின்படி பெண்ணை இழிவான வகையிலும் சீருடை பணியாளர்களை அவமதிக்கும் நோக்கத்திலும் பேசுதல், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

The post பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சு யூடியூபர் சங்கர் தேனியில் கைது: சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: