கோடை வெப்பத்தையொட்டி குடிநீர், நீர்மோர் பந்தல்களை திறக்க கட்சியினருக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தல்!

சென்னை: கோடை வெப்பத்தையொட்டி குடிநீர், நீர்மோர் பந்தல்களை திறக்க கட்சியினருக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பயனளிக்கும் வகையில் குடிநீர், நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் சில தினங்களுக்கு வெப்ப அனல் வீசக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் கழக உடன்பிறப்புகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை திறந்திடுமாறு வேண்டுகிறேன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளால் அமைக்கப்படும் குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்கள் சுட்டெரிக்கும் வெயிலில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திட வேண்டும். தகுந்த இடங்களை தேர்வு செய்து எளிமையான முறையில் குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை அமைப்பதோடு, அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமான முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கழக உடன்பிறப்புகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

The post கோடை வெப்பத்தையொட்டி குடிநீர், நீர்மோர் பந்தல்களை திறக்க கட்சியினருக்கு டிடிவி தினகரன் அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Related Stories: