கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற மனைவி: கள்ளக்காதலன், இன்ஸ்டா பிரபலம் கைது

பார்மர்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, இன்ஸ்டாகிராம் கள்ளக்காதலியுடன் இணைந்து கார் டிரைவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் மல்புரா பாண்டா பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருக்கும் தண்ணீர் தொட்டியில், கடந்த 4ம் தேதியன்று தேஜாராம் (42) என்ற நபரின் சடலம் மீட்கப்பட்டது. ஜாலூர் மாவட்டத்தில் கட்டிட வேலை பார்த்து வந்த தேஜாராம் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தேஜாராமின் மனைவியான யூடியூபர் சமூக வலைதள பிரபலமான நேட்டல் (36) என்பவருக்கும், மித்ரா கிராமத்தைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் குமான்சிங் (30) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

இன்ஸ்டாகிராம் மூலமாகவே குமான்சிங்குடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. வேலை காரணமாக தேஜாராம் வெளியூரில் தங்கியிருந்த நிலையில், இந்த கள்ளக்காதல் விவகாரம் அவருக்குத் தெரியவந்ததால் தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, கணவரை தீர்த்துக்கட்ட நேட்டல் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டார். அதன்படி தான் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கூறி தனது செல்போனை நேட்டல் சுவிட்ச் ஆப் செய்துள்ளார். இதனால் பதற்றமடைந்த தேஜாராம், மனைவியைத் தேடி அலைந்தபோது குமான்சிங்கைத் தொடர்பு கொண்டுள்ளார்.

இருவரும் சேர்ந்து தேடலாம் என ஆசை வார்த்தை கூறி தேஜாராம் வரவழைக்கப்பட்டார். அப்போது அவருக்கு அதிக அளவில் மதுவை ஊற்றிக் கொடுத்து, மயக்கமடைந்த நிலையில் கார் மூலம் மல்புரா பாண்டா பகுதிக்கு கொண்டு சென்று தண்ணீர் தொட்டியில் அழுத்தி கொலை செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட கள்ளக்காதல் ஜோடியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: