பஸ் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை: திருவாரூரில் பரபரப்பு

திருவாரூர்: திருவாரூர் பஸ் நிலையத்தில் இளம்பெண்னுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி மற்றும் இன்ஜினியரிங் மாணவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் டவுன் பகுதியை சேர்ந்த 27 வயதான இளம்பெண். உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தவர், நேற்று முன்தினம் இரவு பஸ்சில் புதிய பேருந்து நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக தந்தை வருகைக்காக காத்து இருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 நபர்கள், தனியாக நின்ற அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டனர். இதனால் அந்த பெண் பதறி அழுதுள்ளார். சிறிது நேரத்தில் பெண்ணின் தந்தை பைக்கில் பேருந்து நிலையம் வந்தார். அப்போது அவரிடம் நடந்த விபரத்தை கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், 2 பேர் வந்த பைக்கின் சாவியை பிடுங்கி வைத்து கொண்டார்.

இதுதொடர்பாக திருவாரூர் டவுன் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், திருத்துறைப்பூண்டி அடுத்த ஆலத்தம்பாடி கரும்பியூர் பகுதியை சேர்ந்த திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய தவெக செயலாளர் ஆனந்த் (எ) பிரவீன்குமார் (24), அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் நாகப்பட்டினத்தில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரில் 2வது ஆண்டு படித்து வரும் அசோக் (26) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். இந்தநிலையில் ஒன்றிய செயலாளார் ஆனந்த் (எ) பிரவீன்குமாரை கட்சியில் இருந்து நீக்கி திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர் பாரதி நேற்று அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

மாணவியிடம் ஆபாச பேச்சு அரசுப்பள்ளி ஆசிரியர் கைது
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி சிறுமுகை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் -2 முடித்து விட்டு தற்போது கோவை தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் பள்ளியில் பயின்றபோது அங்கு கோவை துடியலூர் என்ஜிஜிஓ காலனி துரைராஜ் நகரை சேர்ந்த சுரேஷ் (43) என்பவர் ஆசிரியராக பணி புரிந்துள்ளார். அப்போது, அவர் பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தன்னை அழைக்குமாறு செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி ஆசிரியர் சுரேஷ், 17 வயது மாணவியை செல்போனில் அழைத்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் ஆசிரியர் சுரேஷை கைது செய்தனர்.

பெண்ணை தாக்கி கடத்த முயன்ற விஜய் கட்சி நிர்வாகி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உஞ்சனை குட்டிக்காபாளையத்தில் வசித்து வரும் 35 வயதான பெண்ணின் கணவர், பார் ஒன்றை லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களாக குமரமங்கலம் பகுதியை சேர்ந்த தவெக ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் நவீன் என்பவர், காரில் பின்தொடர்ந்து வந்து அந்த பெண்ணிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம், எளையாம்பாளையம் பிரிவு சாலை அருகே, அப்பெண் காலைக்கடன் கழிக்க வந்த போது, இரு நண்பர்களுடன் வந்த நவீன், காரில் ஏறுமாறு அப்பெண்ணை கட்டாயப்படுத்தி உள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், எதற்காக என்னை அழைக்கிறீர்கள் என கேட்ட போது, அப்பெண்ணின் கையை முறுக்கி சாதி பெயரைச் சொல்லி திட்டி அடித்துள்ளார். இதனையடுத்து அந்த ெபண் சத்தமிட்டதால், அவரை கீழே தள்ளி விட்டு காரில் தப்பி ஓடி விட்டார். இதில் காயமடைந்த அப்பெண், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, திருச்செங்கோடு புறநகர் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: