திருடன் என நினைத்து அடித்து வடமாநில வாலிபர் கொலை: வேலூரில் பயங்கரம்

வேலூர்: வேலூர் காகிதப்பட்டறையில் திருடன் என நினைத்து வடமாநில வாலிபரை சிலர் அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவும் மாவட்டத்தில் கட்டிடப்பணி, விவசாயப்பணி உள்ளிட்ட வேலைகளுக்காகவும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வந்து தங்கி உள்ளனர். வேலை இல்லாதபோது வடமாநில வாலிபர்கள் கும்பல், கும்பலாக நகரின் பல பகுதிகளில் சுற்றித்திரிகின்றனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகமடையும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், திருடன் என நினைத்து தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. இதேபோல் கடந்த 7ம் தேதி காட்பாடி தாராபடவேடு குளத்துக்கரை தெருவில் 30 வயதுள்ள வடமாநில வாலிபர் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கல்லால் தாக்கியுள்ளனர். தகவலறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடம் சென்றனர். அங்கு தலையில் கற்கலால் கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த வாலிபரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒருவரை பிடித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், வேலூர் காகிதப்பட்டறை செல்லியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் அருகே நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் ஒரு மர்ம நபர் சுற்றித்திரிந்துள்ளார். பின்னர் ஒரு வீட்டு சுவர் அருகே உட்கார்ந்திருந்தாராம். எனவே அந்த நபர் வீடு புகுந்து திருட வந்துள்ளார் என சந்தேகமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சரமாரி தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த நபர் மயங்கி விழுந்தார். தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் படுகாயமடைந்த வாலிபரை மீட்டு வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துமவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அதிகாலை கழிவறையில் அந்த வாலிபர் இறந்து கிடந்ததாக தெரிகிறது. தகவலறிந்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இறந்த நபர் மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்த ஜோய்ஹிந்த் முண்டா(35) என்பது தெரியவந்தது. அவரை தாக்கியதாக சந்தேகத்தின்பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: