பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் பிடிக்க முயன்றபோது எஸ்ஐயை அரிவாளால் வெட்டிய குற்றவாளிகள்: தப்பியோடியபோது கை, கால் முறிந்தது

தூத்துக்குடி: பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் பிடிக்க முயன்றபோது எஸ்ஐயை அரிவாளால் வெட்டிய ரவுடி மற்றும் இளஞ்சிறாரை தூத்துக்குடி போலீசார் கைது செய்தனர். இதில் போலீசிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ரவுடியின் கால் எலும்பு முறிந்தது, இளஞ்சிறாரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிலுவைப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் என்ற நண்டு (22). இவருடைய நண்பர் 17 வயது இளஞ்சிறார். இருவர் மீதும் தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இருவரும் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் இருவரும் வடபாகம் எல்லைக்குட்பட்ட அம்பேத்கர் நகரில் பதுங்கி இருப்பதாக தாளமுத்துநகர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்ஐ மாணிக்கராஜ் (38), ஏட்டுகள் மீனாட்சிசுந்தரம் (34), சையது ஈசாக் ஆகியோர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மறைவிடத்தில் பதுங்கி இருந்த இருவரும் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் இருவரையும் மடக்கி பிடிக்க முயன்றபோது, மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் வாளால் வெட்டியுள்ளனர்.

இதில் எஸ்ஐ மாணிக்கராஜுக்கு 2 இடத்தில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. மேலும் ஏட்டுக்கள் மீனாட்சிசுந்தரம், சையது ஈசாக்கை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றனர். போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். இருவரும் சாலையோர பாலத்தில் இருந்து கீழே குதித்தபோது கார்த்திக்கின் வலது கால் எலும்பு உடைந்தது. இளஞ்சிறாரின் இடது கை ஒடிந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து கார்த்திக் என்ற நண்டு, 17 வயது இளஞ்சிறாரை கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: