குமாரபாளையம்: தமிழக பால்வளத்துறை அமைச்சர் வீடு அருகே கொள்ளை சம்பவம் நடந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே வேலன் கார்டனில், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி புதிதாக வீடு வாங்கி குடியேறியுள்ளார். இங்கு குமாரபாளையத்தை சேர்ந்த தேவராஜன் வீடு கட்டி வருகிறார். திருப்பூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் புவனேஷ் இதற்கான கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், 16ம் தேதி மதியம் 2 மணியளவில் டூவீலரில் வந்த இருவர், புதிய கட்டிடத்தை நோட்டமிட்டபடி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர். பின்னர் அங்கு வீடு கட்டுமான பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாதன பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
பொருட்கள் காணாமல் போனது குறித்து ஒப்பந்ததாரர் புவனேஷ், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார்.
அப்போது, அதில் பட்டப்பகலில் இரண்டு இளைஞர்கள் கட்டிடத்தில் இருந்த பொருட்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புவனேஷ் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, சிசிடிவி பதிவை கைப்பற்றினர். தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வீட்டின் அருகிலேயே, பட்டப் பகலில் அரங்கேறியுள்ள திருட்டுச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த திருட்டு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
