தொழிலாளியை வெட்டிய போதை தவெக பிரமுகர்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ்(45). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (28). தவெக பிரமுகரான இவரது தாயார் குணவதி, கடந்த ஆண்டு பண தேவைக்காக ரமேஷின் தாய் வெள்ளையம்மாளிடம் தங்க மூக்குத்தியை வாங்கி உள்ளார். அதை திருப்பி கொடுக்காத நிலையில் குத்தாலம் போலீசார் மூலமாக நகைக்கான பணத்தை ரமேஷ் பெற்றுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 12ம்தேதி நடைபெற்ற கோயில் விழாவில் ரமேஷ் உணவு பரிமாறியுள்ளார். அப்போது, பந்தியில் அமர்ந்திருந்த குணவதிக்கும் உணவு பரிமாறிய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக குணவதி, குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு குணவதியுடன் ரகளையில் ஈடுபட்ட ரமேஷ், பின்னர் வீட்டில் தூங்க சென்று விட்டார். தகவல் தெரியவந்து போதையில் அவரது வீட்டுக்குள் புகுந்த கார்த்திக், தூங்கி கொண்டிருந்த ரமேஷை அரிவாளால் சரமாரி வெட்டி விட்டு தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமேஷை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு 30க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து தவெக பிரமுகர் கார்த்திக், அவரது தாயார் குணவதி ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

Related Stories: