அவனியாபுரம்: அவனியாபுரம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாலிபரை 5 பேர் கொண்ட கும்பல், ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அவனியாபுரம் அருகே எம்.எம்.சி காலனி 2வது பிளாக்கை சேர்ந்தவர் பாலாஜி (30). திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவரது நண்பர் ஆறுமுக நகரை சேர்ந்த ராஜா உசேன் (33). எம்.எம்.சி காலனி பகுதியில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் கடந்த 20 நாட்களுக்கு முன் நடந்த திருவிழாவில் பாலாஜிக்கும் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஆகியுள்ளது.
இந்த ஆத்திரத்தில் சஞ்சய் உள்பட 5 பேர் கொண்ட கும்பல், பாலாஜியை தேடி வந்தனர். நேற்று மதியம் பாலாஜி, ராஜா உசேன் இருவரும் எம்.எம்.சி காலனி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே பேசிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அந்த கும்பல், இருவரையும் பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். உயிருக்கு பயந்து தப்பியோடிய பாலாஜியை அந்த கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜா உசேன் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் சரிந்து விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் ராஜா உசேனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் போலீசார், பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 5 பேரை தேடி வருகின்றனர்.
