உத்திரமேரூரில் ஆட்டோ டிரைவர் வெட்டி கொலை ஏன்?: கைதான அண்ணன், தம்பி திடுக் தகவல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பாப்பநல்லூர் உள்ள வனப்பகுதியில் நேற்று காலை வாலிபர் ஒருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், கொலையானவர் பருத்திக்கொல்லை கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமார் (38) என தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவி கல்பனாவிடம் போலீசார் விசாரித்தனர். அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த சம்பத் (46) என்பவர்தான் சுரேஷ்குமாரை அழைத்து சென்றதும், அவர்தான் அடிக்கடி போன் செய்ததும் தெரியவந்தது.

அவரது செல்போனை போலீசார் தொடர்பு கொண்டபோது திருமுல்லைவாயல் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று சம்பத் மற்றும் அவரது தம்பி தியாகு (41) ஆகியோரை உத்திரமேரூருக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்கள்தான், சுரேஷ்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சம்பத், பாப்பநல்லூரில் சலூன்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சுரேஷ்குமார் அடிக்கடி செல்வதுண்டு. அதனால் பழக்கம் ஏற்பட்டது. சில நேரங்களில் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். திடீரென ஒருநாள் தகராறு ஏற்பட்டது. போலீசில் சுரேஷ்குமார் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சம்பத் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு வழக்கை சுரேஷ்குமார் வாபஸ் பெற்றுள்ளார். வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் சுரேஷ்குமார் நிலைமை மோசமாக இருக்கும் என சம்பத் பலரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், வழக்கை வாபஸ் வாங்கியதற்கு பணம் கொடு என்று சுரேஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால், சம்பத் வழங்கவில்லை. 3 மாதங்களாக இழுத்தடித்துள்ளார். அடிக்கடி பணம் கேட்டதால் ேநற்று, பாப்பநல்லூர் உள்ள வனப்பகுதிக்கு வரும்படி சம்பத் அழைத்துள்ளார். உடனே சுரேஷ்குமாரும் ஆட்டோவில் சென்றார். அங்கு சம்பத், தியாகு ஆகியோர் இருந்தனர். பின்னர் 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சம்பத், தியாகு ஆகியோர், சரமாரியாக சுரேஷ்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து, கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: