பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அடுத்த பிக்கல்நாயக்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து (35). தவெக நிர்வாகியான இவர், அக்கட்சியின் வாக்குச்சாவடி முகவராக இருந்தார். இவர் பாத்திர வியாபார தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் மாரண்டஅள்ளியில் செயல்படும் பிரபல ஷோரூமிற்கு, தனது பயன்பாட்டிற்காக புதிய டூவீலர் வாங்க சென்றுள்ளார். அங்கு தவணை முறையில் வாங்குவதாக கூறிய அவர், முன்பணமாக ரூ.31 ஆயிரத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்டு, ஷோரூம் நிர்வாகிகள் அவருக்கு டூவீலரை கொடுத்தனர். இதையடுத்து புதிய டூவீலரை எடுத்து கொண்டு, அங்கமுத்து தனது வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனிடையே, அவர் கொடுத்த பணத்தை, ஷோரூமில் இருந்த ஊழியர்கள் எண்ணிய போது, அதில் 19 ஐநூறு ரூபாய் நோட்டுகள் (ரூ.9,500) கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அங்கமுத்துவை செல்போனில் தொடர்பு கொண்ட ஷோரூம் ஊழியர்கள், கையெழுத்து போட வேண்டும் எனக்கூறி அவரை வரவழைத்துள்ளனர். அவர் அங்கு சென்றதும், ஷோரூம் மேலாளர் ரஞ்சித், மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், பணத்தை வாங்கி சோதனை செய்ததில், அவை கள்ளநோட்டுகள் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து, அங்கமுத்துவை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை பாலக்ேகாடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்தனர். மேலும், கள்ள நோட்டுகள் அவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்தும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
