டெல்லி தலைவர்கள் விரைவில் தமிழ்நாட்டில் பிரசாரம்: மேலிட காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி

சென்னை: டெல்லி தலைவர்கள் விரைவில் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளதாக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறினார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 தொகுதிகளுக்கான மேலிடப் பார்வையாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். இதில், அகில இந்திய காங்கிரஸ் மூத்த பார்வையாளர்கள் முகுல் வாஸ்னிக், உத்தம்குமார் ரெட்டி, குவாசி நிசாமுதின், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான மேலிட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து, கிரிஷ் சோடங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: திமுக தரப்பில் பிரசாரத்திற்கு ராகுல் காந்தியை அழைத்ததாகவும் ஆனால் ராகுல் காந்தி அலுவலகம் அதை நிராகரித்ததாகவும் என்று வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. காங்கிரஸ் கட்சியின் டெல்லி நிர்வாகிகள் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் அட்டவணை விரைவில் வெளியாகும். டெல்லியில் நாடாளுமன்றம் நடைபெறுவதால், நேரமின்மை காரணமாக ராகுல் காந்தி தமிழக தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை, ஆனாலும் விரைவில் நேரம் ஒதுக்கி பிரசாரம் மேற்கொள்வார்.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார். திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ராகுல்காந்தி அதிருப்தியாக இருக்கிறாரா? என்று கேட்கிறீர்கள், இது தவறான கருத்து, பொய்யை பரப்புகின்றனர். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் த.வெ.க பக்கம் நிற்பார்கள் என விஜய் கூறியிருக்கிறாரே? என்று கேட்கிறீர்கள். உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் பக்கம் தான் நிற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் மூத்த பார்வையாளர் முகுல் வாஸ்னிக் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களின் பிரசார தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் – திமுக கூட்டணி இணைந்து செயல்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எங்கள் அரசு தமிழ்நாட்டு மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. எனவே, இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்’’ என்றார்.

Related Stories: