தஞ்சாவூர் ரயிலடியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு முன்பு எடப்பாடி மற்றும் டிடிவி.தினகரன் எதிரும், புதிருமாக இருந்தார்கள். தற்போது பாஜ மேலிட பொறுப்பாளர்களின் வார்த்தைக்கு பயந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே தஞ்சாவூரில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடியுடன் அமமுக என்றும் கூட்டணி வைக்காது. அப்படி கூட்டணி வைத்தால் நான் தூக்கில் தொங்கிவிடுவேன் என கூறிய டிடிவி நேற்று எடப்பாடியுடன் இணைந்து அதே தஞ்சாவூரில் ஒரே வாகனத்தில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில், ‘‘சிலர் பயத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.
எங்களுக்குள் இருந்தது அண்ணன், தம்பி சண்டைதான். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நம் தொண்டர்களும், நிர்வாகிகளும், ஒன்றாக இணைந்து விட்டனர். கருத்து வேறுபாடுகளை மறந்து, அம்மாவின் ஆட்சியை இபிஎஸ் தலைமையில் உருவாக்குவதற்கு இணைந்திருக்கிறோம். இபிஎஸ் முதல்வராக இருந்தபோது டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றினார். அதனால் தான் சோழ மண்டலத்தில் விவசாயிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்’’ என்றார்.
எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘அமமுக சார்பில் திருவையாறில் போட்டியிடும் கார்த்திகேயனுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் கொள்முதல் செய்யப்பட்டு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், நாங்கள் அப்படித்தான் எங்கள் ஆட்சியில் செய்து கொண்டிருந்தோம்.
அதிமுக சார்பிலும், அமமுக சார்பிலும் வாக்குறுதிகள் வெளியிட்டோம். அதை நிறைவேற்றுவோம். பெண்களைப் போல இனி ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மீண்டும் அதிமுக ஆட்சியில் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும்’’ என்றார்.
* நெல்லுக்கு ஊக்கத்தொகை நிறுத்த சொல்லும் ஒன்றிய அரசு கண்டித்து பேசாத எடப்பாடி
தமிழ்நாடு அரசு வழங்கும் நெல்லுக்கான ஊக்கத்தொகையை நிறுத்தக்கோரி ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது, இதற்கு பழனிசாமி வாய் திறந்து கண்டிப்பாரா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தஞ்சையில் பேசியபோது கேள்வி எழுப்பினார். இந்நிலையில் நேற்று தஞ்சையில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதுபற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் சென்றது விவசாயிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
