நீங்கள் மிரட்ட மிரட்ட இன்னும் அதிகமாக பேசுவேன், எதிர்ப்பேன்: எடப்பாடிக்கு கனிமொழி பதிலடி

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம்தென்னரசுவை ஆதரித்து, கனிமொழி எம்பி நேற்று முன்தினம் இரவு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: எதிரணியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் ஒன்றிய அரசோடு கரம் கோர்த்துக்கொண்டு, நம்மை பார்த்து குறைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய தேர்தல் அறிக்கையை பார்த்து நாம் காப்பி அடித்துவிட்டோம் என்று சொல்கிறார். காப்பி அடிக்கிறது சரின்னு நான் சொல்லவில்லை.

ஆனால் காப்பி அடித்தால்கூட பாஸ் பண்ணுகிற பிள்ளைகளை பார்த்து தானே காப்பி அடிக்க வேண்டும். நீங்கள் தேறுறதுக்கு வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்ட உங்களை பார்த்து யாராவது காப்பியடிப்பாங்களா? நீங்கள் என்ன எழுதி இருக்கீங்கன்னு எங்களுக்கு தெரியாது. எடப்பாடிக்கு முதலில் தேர்தல் பயம் வந்து விட்டது. பிறகு தேர்தல் ஜூரம் வந்து விட்டது. இப்போது ஜன்னி வந்து விட்டது. அதனால்தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கே தெரியாமல் பேசுகிறார்.

ஒரு முதலமைச்சராக இருந்தவர், இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய ஒருவர் என்பதை மறந்துவிட்டு, மிக மோசமாக விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறார். என்னை பார்த்து, நீங்கள் மறுபடியும் ஜெயிலுக்கு போய்விடுவீர்கள் என்று சொல்கிறார். நான் எடப்பாடிக்கு ஒண்ணே ஒண்ணு சொல்ல விரும்புகிறேன். என் மீது போடப்பட்டது பொய் வழக்கு. அந்த வழக்கை எதிர்கொண்டு, என் மீது குற்றம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டு இங்கே நின்று கொண்டிருக்கிறேன்.

நான் நினைத்தால் என்னை வீணாக சிறையில் வைத்தவர்கள் மீது வழக்கு போட முடியும். ஆனால் விடுதலை செய்யப்பட்டவள் நான். அவர் மேல் நிறைய வழக்குகள் இருக்கிறது. அதையும் அவர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் நான் அஞ்சக்கூடியவள் அல்ல. நான் பெண்ணென்று நினைத்து என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்காதீர்கள்.

உங்களைபோல் நூறு பேரை பார்த்து, வெற்றி பெற்ற தலைவர் கலைஞருடைய மகள் நான். தந்தை பெரியாரின் பாசறையில் என்னை இணைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்திருக்கிறேன். தலைவர் கலைஞர் வழியில் வந்திருக்கும் எனக்கு இந்த மிரட்டல் எல்லாம் புதிதல்ல. நீங்கள் மிரட்ட மிரட்ட இன்னும் அதிகமாக பேசுவேன். இன்னும் அதிகமாக எதிர்ப்பேன்.

எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன் நம்முடைய முதலமைச்சரை பற்றி மிகத் தரக்குறைவாக பேசினார். அரசியல்ரீதியாக எதிர்ப்பதற்கு தைரியம் இல்லாமல் தரக்குறைவாக விமர்சனங்களை செய்து கொண்டிருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு வரக்கூடிய தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: