சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று பிரசாரம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே ஜோசப் விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார். முதலில் நடிகர் விஜய் நல்ல குடும்ப தலைவராக இருக்க வேண்டும். நல்ல கணவனாக இருக்க வேண்டும். காரைக்குடியில் அவர் சைக்கிள் ஓட்டினார். அதுக்கப்புறம் கை காட்டிவிட்டு, ஆடிக்கிட்டு, ஓடிக்கிட்டு வந்தாருன்னு சொன்னாங்க…
அவர் சைக்கிள் ஓட்டியது கேலிக்கூத்தான விஷயம். எல்லோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகி விட முடியாது. அதற்காக தனி கொள்கைகள் வேண்டும். அமைப்பு வேண்டும். இயற்கையான உணர்வுகள் வேண்டும். நாம என்ன சைக்கிள் ஓட்டுறதுக்கா வந்திருக்கோம்? குமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை, யார் ஆட்சிக்கு வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதை வாக்களிப்பவர்கள் முடிவு செய்வார்கள். நான் எங்களுடைய வேட்பாளர்களை பற்றி மட்டும் தான் பேசுவேன்.
எதிர் தரப்பினர் குறித்து தனிப்பட்ட விமர்சனம் செய்ய மாட்டேன். இவ்வாறு தெரிவித்தார். ‘ஜனநாயகன் படம் இணையதளத்தில் கசிந்ததற்கு எல்.முருகனும், உதயநிதியும் தான் காரணம் என ஆதவ் அர்ஜூனா கூறுகிறாரே’’ என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ‘‘நான் ஒண்ணும் சினிமா நடிகரெல்லாம் கிடையாது. நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
சென்சார் போர்டு ஒரு இன்டிபென்டென்ட் பாடி. அது தன் கடமையை செய்கிறது. இதுல தம்பி ஜோசப் கிருஷ்ணாவா? இல்லை ஜோசப் விஜய்யா? அவர் கட்சியில் இருந்து ஒருத்தர் கருத்து சொன்னா அதுக்கெல்லாம் நான் பதில் கருத்து சொல்ல முடியாது’’ என்றார்.
* நயினார் காரில் சோதனை
சிங்கம்புணரிக்கு நயினார் நாகேந்திரன் நேற்று பிரசாரத்திற்கு வந்தபோது, மதுரை-சிவகங்கை மாவட்ட எல்லையில், சிங்கம்புணரி காவல் நிலையம் அருகே அவரது பிரசார வாகனம் பறக்கும் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 10 நிமிடம் நடந்த சோதனைக்கு பிறகு வாகனம் கிளம்பிச் சென்றது.
* மடி பிச்சை கேட்கிறேன் எங்களுக்கு ஓட்டு போடுங்க: நயினார் கெஞ்சல்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு, நேற்று காலை திருப்புத்தூர் தொகுதி தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறனை ஆதரித்து பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, ‘‘இந்த கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரையும் என்னால் சொல்ல முடியும்.
அந்த அளவிற்கு இந்த மாவட்ட மக்களோடும், மனநிலையோடும் இரண்டற கலந்தவன் என்ற முறையில் பாதம் தொட்டு கேட்கிறேன். மடி பிச்சை கேட்கிறேன். எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள். திருமாறன் வெற்றி பெற்றால் காரைக்குடி – திண்டுக்கல் இடையே ரயில் விடப்படும். தாமரை வென்றால் பிரதமர் மோடி திருப்பத்தூர் பகுதிக்கு நேரடியாக வந்து எல்லா திட்டங்களையும் நிறைவேற்றி தருவார்’’ என்றார்.
