கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அபூபக்கர் சித்திக்கை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பேசியதாவது: 15 ஆண்டுகளாக களத்தில் நிற்கிறோம். தேர்தல் அரசியலாக 10 ஆண்டுகள் போட்டியிடுகிறோம். நான்கு முறை தோற்றுள்ளோம். 2016ல் போட்டியிட்டோம், 4.5 லட்சம் வாக்குகள் தந்தனர். 2018ல் போட்டியிட்டோம் 18 லட்சம் வாக்குகள் தந்தனர்.
2021ல் போட்டியிட்டோம் 30 லட்சம் வாக்குகள் தந்து 3வது கட்சியாக வளர்த்தெடுத்தனர். 2024ல் போட்டியிட்டோம் 36 லட்சம் வாக்குகள் பெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானோம். தற்போதைய அதிமுக எம்எல்ஏ 6 ஆயிரம் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர்கள் கூட 60 ஆயிரம் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். இது ஒரு சேவையா.
நீங்கள் ஓட்டு போடாமல் குவாட்டர் (மது) அடித்து கூட வீட்டிலேயே தூங்கி விடுங்கள். ஜாதி, மதம் பார்த்து அரசியல் அதிகாரத்திற்கு வந்தால் மனித நேயம் செத்து விடும். பணம் கொடுத்தால்தான் வாக்கு பெற முடியும் என்ற நிலை இருந்திருந்தால் நமக்கு கக்கன், காமராஜர், காயிதே மில்லத் முத்துராமலிங்கத் தேவர் கிடைத்திருப்பாரா?. ஆயிரம் இரண்டாயிரத்திற்கு நீங்கள் வாக்களிக்க போகிறீர்களா. அந்த நிலையை மாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
