விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கடற்கரைராஜை ஆதரித்து, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி நேற்று முன்தினம் இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: திருச்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் போது எனக்கு கிடைத்த தீப்பெட்டி சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். எனவே இந்த தீப்பெட்டி என் வாழ்க்கையில் ஒரு பொருளாகவே அங்கம் வகித்து வருகிறது.
எனவே, இதனை காப்பாற்ற நான் எப்பொழுதும் உறுதியாக இருப்பேன். தற்போது சாத்தூரில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஏன் திருநெல்வேலியை விட்டு இங்கு வந்து போட்டியிடுகிறார்? ஏனென்றால் திருநெல்வேலியில் போட்டியிட்டால் டெபாசிட்டை கூட இழந்து விடுவார்.
பாஜ ஆட்சிக்கு வந்தால் ஜாதி, மத கலவரத்தை ஏற்படுத்தி விடும். உங்களுக்கு அமைதியான வாழ்க்கை வேண்டும் என்றால் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் உள்ளூர் நபரை ஆதரித்தால் எப்பொழுதும் உங்கள் குறைகள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஆனால் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றால் அவரை எங்கு போய் தேடுவீர்கள்?. இவ்வாறு பேசினார்.
