சொன்னாரு..! செஞ்சாரு..!! குட்டி காவலர் திட்டம்

சொன்னாரு: தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் ‘குட்டி காவலர்’ திட்டம் தொடங்கப்படும் என 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்தது.

செஞ்சாரு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக ‘குட்டி காவலர்’ திட்டத்தை 2022ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி தொடங்கி வைத்தார். இது சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் ஆகும். பள்ளி மாணவர்களை சாலை விதிகளின் சிறு காவலர்களாக மாற்றி, அவர்கள் வழியாகக் குடும்பம் மற்றும் சமூகத்துக்கு விழிப்புணர்வைப் பரப்பும் ஒரு முயற்சியாகும்.

கோயம்புத்தூர் கொடிசியா வர்த்தக மையத்தில் 5,000 மாணவர்கள் நேரில் கலந்துகொண்டு சாலை விதிகள் குறித்தும் சாலைப் பாதுகாப்பு குறித்தும் உறுதிமொழி ஏற்றனர். அதேநேரத்தில் மாவட்டம் முழுவதும் 4.50 லட்சம் மாணவர்கள் பள்ளி வளாகங்களில் உறுதிமொழி எடுத்தனர். இந்த உறுதிமொழியேற்ற நிகழ்வு ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. அதற்கான சான்றிதழ் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. இது திட்டத்தின் வெற்றிக்கான ஆரம்பக் கட்டமாக அமைந்தது.

‘குட்டி காவலர்’ திட்டம் 3 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்டது. இவர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது. “நான் இன்று முதல் குட்டி காவலராகப் பொறுப்பேற்கிறேன். சாலை விதிகளை கடைபிடிப்பேன். பெற்றோர், உறவினர், நண்பர்களிடம் விழிப்புணர்வைப் பரப்புவேன்” எனும் உறுதிமொழியை மாணவர்கள் ஏற்கின்றனர்.

ஓடும் பேருந்தில் ஏறவோ இறங்கவோ கூடாது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் இருக்கைப் பட்டை கட்ட வேண்டும் போன்ற அடிப்படை விதிகளை இளம் வயதிலேயே கற்றுக்கொள்கின்றனர். இத்திட்டம் மாணவர்களுக்குச் சாலைப் பாதுகாப்பு பற்றிய அறிவு வளர்க்க உதவுகிறது. அவர்கள் வீட்டில், சுற்றுப்புறத்தில் விழிப்புணர்வைப் பரப்பும் தூதுவர்களாக மாறுகின்றனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கிறது.

சாலை விபத்துகள் குறைவதற்கு இளம் வயதிலிருந்தே பொறுப்புணர்வு ஏற்படுகிறது. நீண்டகாலத்தில் இத்திட்டம் பொறுப்பான குடிமக்களை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூரில் தொடங்கிய இத்திட்டம் பின்னர் ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு விரிவாக்கம் பெற்றது. மேலும் போக்குவரத்துப் போலீஸார் பள்ளிகளில் நேரடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சாலை விபத்துகளைத் தடுக்கும் இந்த முயற்சி, தமிழகத்தின் போக்குவரத்து பாதுகாப்பு வரலாற்றில் புதிய பக்கத்தை எழுதிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: