சென்னை: அதிமுகவுக்கு கொள்கையும் இல்லை; கோட்பாடும் இல்லை. அந்த கட்சியின் தலைமைக் கழகமாக டெல்லி பாஜதான் இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: மக்களின் ஆதரவோடு 200 தொகுதிகளுக்கு மேல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைப்போம். அதில் எந்த சந்தேகமுமில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் அளிக்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை நாங்கள் முதன்முதலில் வாக்குறுதியாக அறிவித்த போது இதை செயல்படுத்தவே முடியாது, தேர்தலுக்காக அறிவித்தது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. ஆனால் இன்று இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்படுத்தி காட்டப்பட்ட திட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் இருந்து வருகிறது. அடுத்து அமையவுள்ள எங்களின் ஆட்சியில் இந்த உரிமை தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்க உள்ளோம்.
பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்திற்கான செலவு மற்ற திட்டங்களைவிட குறைவு தான். ஆனால் அதன் பலன் அளவிட முடியாதது. அடுத்துவரவுள்ள எங்களது ஆட்சியில் 8ம் வகுப்புவரை விரிவுபடுத்த உள்ளோம். இப்போது பசித்த வயிறுடன் ஒரு குழந்தைகூட பள்ளிக்கு வருவதில்லை என்ற நிலையை உருவாக்கி உள்ளோம். 8000 ரூபாய்க்கான இல்லத்தரசி கூப்பன் திட்டம் தான், இன்றைக்கு தேர்தல் களத்தின் சூப்பர்ஸ்டார். பெண்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான – தாங்கள் விரும்பிய பொருளை விரும்பிய கடையில் வாங்கிக் கொள்ளும் இல்லத்தரசி கூப்பன் என்பது, ஒவ்வொரு இல்லத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படும்.
அதிமுகவுக்கு கொள்கையும் இல்லை; கோட்பாடும் இல்ல. அந்தக் கட்சியின் தலைமைக் கழகமாக டெல்லி பா.ஜ.தான் இருக்கிறது. அதனால்தான், அந்தக் கட்சியில் திராவிட இயக்க உணர்வோடு வளர்ந்தவர்கள், திராவிட இயக்கத்தின் தலைமகனாக விளங்கும் திமுகவை நோக்கி வருகிறார்கள். பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கூட பாலியல் தொல்லைக்கு உள்ளான ஆட்சி, அ.தி.மு.க. ஆட்சி. தமிழ்நாட்டை எப்படி குட்கா கிடங்காக மாற்றி நாசப்படுத்தினார்களோ – அதேபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கையே இல்லை என்ற நிலையையும் ஏற்படுத்திவிட்டு போனார்கள். ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஒழித்திருக்கிறோம்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திம் காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்கும் துணிச்சலை பெண்களுக்கு உருவாக்கினோம். பணிபுரியும் பெண்களின் பாதுகாப்புக்கு தோழி விடுதிகள் உருவாக்கியிருக்கோம். மணிப்பூரை கலவர பூமியாக மாற்றியவர்களைக் கூட்டணியில் வைத்துக்கொண்டு, சட்டம் ஒழுங்கு பற்றியோ – பெண்கள் பாதுகாப்பு பற்றியோ பேசுவதற்கு பழனிசாமிக்கு கிஞ்சித்தும் தகுதியில்லை. தமிழ்நாட்டைக் கடனாளி மாநிலமாக விட்டுச் சென்றதே, பழனிசாமி என்பதை நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையே சான்று.
திறனற்ற நிர்வாகத்தால் மாநிலத்தின் நிதி நிலைமை, மூச்சுத்திணறி தவித்த நேரத்தில், அதனை சரிசெய்ய, ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார அறிஞர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை நியமித்து, அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி, நிதிநிலையைச் சீராக்கியதோடு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 30 லட்சம் கோடியாக உயர்த்தி உள்ளோம். தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 11.19% ஆக அதிகரித்து, நம்பர்.1 மாநிலமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்துள்ளோம். ஆகவே, பழனிசாமி நாள்தோறு அள்ளித்தெளிக்கும் அவதூறுகள் எல்லாம் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது.
ஒன்றிய அரசு திட்டமிடும் தொகுதி மறுசீரமைப்பால், தமிழ்நாடு பாதிக்கப்படும் என்று உணர்ந்தவுடன், திமுக தான் முதலில் உரிமைக்குரல் எழுப்பியது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்; மேலும், 1971ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்து, “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” எனும் முழக்கத்தை முன்னெடுத்தோம். இதுதான் எங்களின் நிலைப்பாடு.
ஆனால், பாஜ பின்வாசல் வழியாக நுழைந்திட வாக்குக் கேட்கும் பழனிசாமி இதுநாள்வரை, தொகுதி மறுசீரமைப்பின் குறித்து வாய்மூடி மவுனம் காப்பது தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகம். சிறுபான்மையினரை அச்சத்தில் வைப்பதுதான் பாஜவின் முக்கிய அஜெண்டா. இப்போது FCRA சட்டம் கொண்டுவர துடிக்கிறார்கள். இந்த மூன்றுக்குமே ஆதரவு கொடுத்து பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்திருக்கும் பழனிசாமிக்கு சிறுபான்மையினர் நலன் மீது துளியும் அக்கறை இல்லை. ஆனால், தி.மு.க.வோ, இந்தியா எப்போதும் மதச்சார்பற்ற நாடாகத் திகழ வேண்டும்;
அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் சரிசமமாக மதிக்கப்பட வேண்டும்; சிறுபான்மையின மக்களுக்கு அரசியல்சட்டம் தந்துள்ள பாதுகாப்புகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் என்றைக்கும் உறுதியாக இருக்கிறோம். தொகுதி மறுவரையறையைக் காரணம் காட்டாமல் உடனே மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்தவர்களை, டெல்லி ஆட்டுவித்தபடி ஆடுபவர்களை அடிமை என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது. இவ்வாறு அவர் கூறினார்.
