விவசாயிகளின் ஊக்கத்தொகையை நிறுத்த சொல்லும் ஒன்றிய நிதியமைச்சரின் போக்கு கண்டிக்கத்தக்கது: வீரபாண்டியன் பாய்ச்சல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து, அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக தேன்கனிக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: விவசாயிகள் இயற்கையோடு போராடி, மற்றவர்களுக்கு வாழ்வளிப்பவர்கள். அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை என்பது ஒரு சலுகை அல்ல, அது அவர்களின் உரிமை மற்றும் ஒரு நாகரிக அரசின் கடமை.

தமிழக முதல்வர் ஏற்கனவே குறிப்பிட்டது போல, விவசாயிகளுக்கான ஊக்கத் தொகையை நிறுத்த சொல்லும், ஒன்றிய நிதியமைச்சரின் போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உற்பத்தி அதிகரித்தால் அது நெருக்கடியை உருவாக்குமா? உற்பத்தி பெருகினால் மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி வழங்கலாமே. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வரி சலுகையும், கடன் ரத்துகளும் செய்யும் அரசு, விவசாயிகளின் ஊக்கத்தொகையை மட்டும் நிறுத்த சொல்வது ஏன்?.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: